
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்திருந்தார். அவரை மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் வரவேற்றனர்.
இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அதன்பிறகு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் சென்றார்.

பசும்பொன்னில் அமைந்திருக்கும், தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.