
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் திருமகனாரின்குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் இன்று மரியாதை செலுத்துவதற்காக மதுரை வந்திருந்தனர்.
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். முதல் நிகழ்ச்சியாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி. விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கனின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோரும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.