‘பரிசுத்த விவாக அழைப்பிதழ்’ என திருமண அழைப்பிதழில் அச்சிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் திருக் கோயிலில் வைத்து நடைபெற இருந்த திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4ம் தேதி உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் பரிசுத்த விவாகம் நடக்க இருப்பதாக ஒரு திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, கோயிலில் வைத்து பரிசுத்த விவாகமா? என்று கூறி அது சர்ச்சைக்கு உள்ளானது.
கீழக்கரையை சேர்ந்த எஸ்.ரஞ்சிதா, எம்.முனியராஜுக்கு இக்கோயில் நடக்கவிருந்த திருமணத்திற்கு அச்சிடப்பட்ட அழைப்பிதழ் தான் அது. இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி பகிரங்கமாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
பரிசுத்த விவாக அழைப்பிதழ் என்று பத்திரிக்கை அடித்து அதில் கிறிஸ்தவ பைபிள் வாசகத்துடன் கர்த்தரின் பெரிதான கிருபையால், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வேளையில் என குறிப்பிட்டு உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் ஆலயத்தில் திருமணம் நடத்த இராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகம் எப்படி அனுமதித்தது…? அந்த திருமணம் 4.11.2020 அன்று நடந்தால் இந்துமுன்னணி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்… ஆலயம் காத்த சேதுபதி மன்னர்களின் பூமியில் இதை ஒரு போதும் அனுமதியோம்… கே. இராமமூர்த்தி (மாவட்ட பொதுச்செயலாளர்
இந்து முன்னணி) என்று சமூகத் தளங்களில் இதற்கான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராமமூர்த்தி, கிறிஸ்தவ பைபிள் வசனங்கள் அடங்கிய அந்தத் திருமண அழைப்பிதழில், இந்தத் திருமணம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வைத்து நடக்க உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நாங்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தோம். இது கோயில்களை அவமதிப்பது போலானது. இதனால் எங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டோம்.
இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு முரண்பாடான இந்தச் செயலுக்கு, உடனடியாக அறநிலையத்துறையினர், சமஸ்தான நிர்வாகத்தினர் பதில் அளித்துள்ளனர். இதன்படி, அனுமதி மறுத்தது வரவேற்கதக்கது, என்றார்.
திருமணத்திற்கான அழைப்பிதழில் சமஸ்தான நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், திருமண வீட்டார் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் திருமணம் நடப்பதாக அச்சிட்டுள்ளனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில், கோயிலில் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த தேவஸ்தான திவான் கே.பழனிவேல் பாண்டியன் கூறியுள்ளார்.