சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள், இன்று காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தில் வழக்கம் போல பஸ், ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், வெளிநாட்டு நிதியுதவி பெற்று உள்நாட்டில் போராட்டங்களை முன்னின்று நடத்தும் பிரிவினைவாத தேசவிரோத அமைப்புகள் பலவும் ஆதரவு கொடுத்து கலந்து கொண்டுள்ளதால், இன்று நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இந்த முழு அடைப்புக்கு காங்கிரஸ் தி.மு.க. – கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதைத் தடுக்க அரசு ஊழியர்கள் அனைவரும் இன்று பணிக்கு வர வேண்டும் என்றும், பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதேபோல் ரயில்களும் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது.