கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொட்லேட்டி பகுதியையொட்டி மல்லேஸ்வரன் என்ற மலை பகுதி உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் மலைஅடிவாரத்தில் விறகு சேகரிக்க செல்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று முன்தினம் அப்பகுதியினர் சிலர் ஒன்றுசேர்ந்து விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது மலையடிவார பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சிறுவனின் சடலத்தை மீட்டபோலீசார், சிறுவனின் சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் சிறுவனின் அடையாளம் எதுவும் அந்தப்பகுதியில் கிடைக்கவில்லை.
இதனிடையே, சிறுவன் உடலில் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களும், வாயில் மிளகாய் பொடி திணிக்கப்பட்டும், மார்பு, கை, கால் போன்ற உடல்பகுதி முழுவதும் தீயால் சுடப்பட்ட காயங்களும் இருந்துள்ளன. இதனால் சிலர் சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் மோப்பநாய் வரவழைத்தும், தடயவியல் துறை அதிகாரிகளை வரவழைத்தும் சோதனை மேற்கொண்டனர். மேலும் சிறுவன் யார்? என்றும் யார்? எதற்காக? கொலை செய்தனர் என்றும் விசாரணை நடத்துகின்றனர்.
சிறுவன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு சடலமாக மிட்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.