திருவள்ளூரில் தந்தைக்கும் மகனுக்கும் இருந்த தகராறில் மகனை வயிற்றில் வெட்டி கொலை செய்து விட்டு தந்தை போலீசில் சரணடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் பழனி (50). இவர் திருத்தணி காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி செல்வி. இவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். முதல் மனைவிக்கு கீர்த்தனா (22), மோனிஷா (20) என்ற 2 மகள்களும், கோகுல் (18) என்ற மகனும் உள்ளனர். அதன் பின் இரண்டாவதாக உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
கோகுல் 10 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்
மேலும் மதுவுக்கு அடிமையான கோகுல் தந்தையிடம் காசு கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று மாலையும் தந்தை வேலை செய்யும் மார்கெட் பகுதிக்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை பழனி தனது மகன் கோகுலை கல்லால் முகத்தில் தாக்கினார்.
பின்னர் வாழை இலை வெட்டும் கத்தியால் சரமாரியாக வயிற்றில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கோகுல் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அதன்பின் தந்தை பழனி தானே திருத்தணி காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.