மதுராந்தகம் ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் குமார். 40 வயதான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கோகுல் குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி கீர்த்தனா மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
திருமணம் ஆன நாள் முதலே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இதையடுத்து மருத்துவ கோகுல் குமார் சோத்துபாக்கம் பகுதியில் உள்ள இல்லத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மனைவி தங்கியுள்ள வீட்டுக்கு வந்த கோகுல் குமார், அவருடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அங்கிருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதை கீர்த்தனாவின் தந்தை தடுக்க சென்ற நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் மனைவியை வீட்டுக்கு வெளியே இழுத்து சென்று, அவர் மீது தனது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
அப்போது காரை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்ற அவர், அச்சரப்பாக்கம் என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார். விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கோகுல்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆத்தூர் சுங்க சாவடி அருகே சென்று கொண்டிருந்த கோகுல் குமாரை கைது செய்தனர்
உயிரிழந்த கீர்த்தனாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் அவரது தந்தைக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை செய்துவிட்டு தப்பிக்க முயலுகையில் கணவர் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.