பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி காலனி பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதால்,
இந்த மாணவி தனது சித்தி மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
அப்போது மாணவி அலறி சத்தம் போட்டதால் பயந்து போன இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து மாணவி தனது உறவினர்களிடம் அழுதவாறு நடந்த அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் திருப்பூருக்கு விரைந்து வந்து தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 இளைஞர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.