வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தனிமையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என கூறியதாகவும் மதபோதகர் மீது அவரது மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் அப்பர் தெருவை சேர்ந்தவர் எம்பிஏ பட்டதாரி ஹீபா ஜெமி (36). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “கடந்த 2008 ஆம் ஆண்டு எனக்கும் மதபோதகராகவும், கிரிகெட் பயிற்சியாளராகவும் உள்ள பால் சாமுவேல் தாஸ் (40) என்பவருக்கும் நெல்லையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
அப்போது வரதட்சணையாக என் பெற்றோர் 120 சவரன் நகை, கணவருக்கு தனியாக 15 சவரன் நகை, 6 சவரன் கை செயின், 75 ஆயிரம் மதிப்புள்ள வைர மோதிரம், ஒரு லட்சம் மதிப்புள்ள ரோடோ வாட்ச், ரொக்கமாக 5 லட்சம், 12 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை கொடுத்தனர்.
இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் என்னிடம் பணம் நகை கேட்டு சண்டை போட்டு வந்தார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே எனது தங்கை உஷாவின் திருமணத்திற்கு வைத்திருந்த 35 சவரன் நகையை சண்டை போட்டு வாங்கி கொண்டார்.
எனக்கு மகன் பிறந்த பிறகு என் பெற்றோரின் சொத்துக்களை கேட்டு தொந்தரவு செய்தார். அவர்கள் என் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டிற்கு சென்ற நிலையில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் என என்னிடம் கேட்டார். இதனால் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன்.
இந்நிலையில் வீட்டு வேலைக்கு உறவுக்கார பெண்ணை சேர்த்தோம். என் கண் முன்பே அந்த பெண்ணிடம் தகாத உறவு கொண்டார். மேலும் என்னுடைய நகை, பணத்தை எடுத்து அந்த பெண்ணிற்கு செலவு செய்தார்.
இதனை தட்டி கேட்டதற்கு என்னை அடித்து வீட்டை விட்டு விரட்டினார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த வீட்டில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மனமுடைந்து விவாகரத்து கேட்டேன். அதற்கு மேலும் என் பெற்றோர் பேரில் உள்ள நிலத்தையும், ரொக்கமாக 50 லட்சமும் வேண்டும் என கேட்கிறார்.
பணம் தரமறுத்தால் இருவரும் தனிமையில் எடுத்த போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார்.
மேலும் என் பெற்றோர் பேரில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள 1 கோடி மதிப்புள்ள எங்கள் நிலத்தை நாங்கள் அவருக்கு விற்று முன்பணம் பெற்றுவிட்டதாக போலி ஆவணம் தயாரித்து வைத்துள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் பால் சாமுவேல் தாமஸ் மீது வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் போன்ற 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.