கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவிழாவில் பங்கேற்பதற்காக நண்பரின் வீட்டுக்கு வந்தவர், வந்த இடத்தில் நடந்த சண்டையில் மனைவியை கொன்றுவிட்டு, நண்பர் குடும்பத்திடம் உடம்பு சரியில்லை என்று நடகமாடி உள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மை அம்பலம் ஆகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாக சாந்தா என்பவருடன் திருமணமாகி உள்ளது.
பிரவீன்குமார் மற்றும் சாந்தா ஆகிய இருவரும் கடந்த வாரம் ஒசூரில் நடைப்பெற்ற திருவிழாவில் பங்கேற்க ஒசூர் மாநகராட்சி சுண்ணாம்பு தெரு பகுதியில் உள்ள பிரவீனின் நண்பர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளார்கள்.
அவர்கள் பிரச்சனை இன்றி சமூகமாகவே இருந்தார்கள்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு தம்பதிகளுக்குள் திடீரென வாக்கு வாதம் முற்றி சண்டையாகி உள்ளது. ஆத்திரமடைந்த பிரவீன் குமார், சாந்தாவின் கழுத்தை நெறித்து அந்த இடத்திலேயே கொலை செய்துள்ளார்.
ஆத்திரத்தில் செய்த தவறை மறைக்க நண்பரிடம் மனைவிக்கு உடம்பு சரியில்லை எனக்கூறி ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சாந்தாவின் ஊரான கோலார் பகுதிக்கு சென்று, அவரின் பெற்றோரிடம் சாந்தா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறி உடலை கொடுத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சாந்தாவிற்கு காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் மீண்டும் உடலை ஒசூருக்கு எடுத்து வந்து போலிசில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்டு ஓசூர் நகர போலிசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓசூர் நகர போலீசார் நடத்திய விசாரணையில் பிரவீன்குமார் மனைவியை கொன்றது உறுதியானது. இதையடுத்து தலைமறைவாகி இருந்த பிரவீன்குமாரை கைது போலீசார் கைது செய்தனர்.
பிரவீன்குமாரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.