பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் உதவியுடன் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் ஜெயலக்ஷ்மி கர்ப்பமானார். கடந்த 10-ம் தேதி மாலை நிறைய கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலட்சுமி அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் பொன்னுசாமி வி.களத்தூர் கைகாட்டி அருகே வாகனத்தை நிறுத்தினார்.
இதையடுத்து ஜெயலட்சுமிக்கு மருத்துவ உதவியாளர் இளையராஜா பிரசவம் பார்த்தார். அதில் அழகான ஆண்குழந்தை ஜெயலட்சுமிக்கு பிறந்தது. அதன் பின்னர் சேயும், தாயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.