சென்னை: தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப் படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சி மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு நெல்லை வேளாண்துறை அதிகாரியின் தற்கொலை விவகாரம்தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இதனை வைத்து எந்த நேரத்திலும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி திருமால்நகரைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர், திருநெல்வேலி வேளாண் பொறியியல் துறையில் செயற் பொறியாளர் பதவியைக் கூடுதலாக வகித்து வந்தார். இவர் நெல்லை மாவட்ட வேளாண் துறையில் காலியாக இருந்த 7 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய குழுவை நியமித்தார். ஆனால் சென்னையிலிருந்து அமைச்சரின் உதவியாளர்கள் எனக் கூறி, சிலர் தாங்கள் சொல்பவருக்கே இப் பதவியைக் கொடுக்கவேண்டும் என நிர்ப்பந்தம் செய்துள்ளனர். பலத்த நெருக்கடி ஏற்பட்டதால், சென்னை சென்று மருத்துவ விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், அங்கிருதவர்கள் ஓட்டுநர் பணியிடம் நியமிப்பவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர். இதனால் தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவரிடம் மேலும் பணம் தர வேண்டும் என தொடர் நெருக்கடி கொடுக்கப் படவே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரின் தற்கொலைக்குக் காரணம் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டார். மேலும், கம்யூநிஸ்டுகளும் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்ததால், இந்த விவகாரத்தில் எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல் கட்டமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப் படும்?
Published:

