தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் பொருளாதார ரீதியாகவும், மத ரீதியாகவும் மற்றும் மக்கள் தொகை உயர்வு அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்த ஜலாலுதீன், இதன் காரணமாக 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் படி இஸ்லாமிய மக்கள் பொருளாதார ரீதியாகவும், அரசின் சலுகைகளையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்றும், தற்போதுள்ள நிலவரப்படி இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்து இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள ஜலாலுதீன், எனவே இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தித் தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, இது குறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தது.