திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தம்பதியர் உள்ளிட்ட மூவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப்பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, மனு கொடுக்க வந்திருந்த நெல்லை சந்திப்பு சித்தரங்கன் தெருவைச் சேர்ந்த தொழிலாளி மாணிக்கம், அவரது மனைவி அனிதா ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே திடீரென தாங்கள் வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தீவைக்க முயன்றனர். அப்போது விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்த தீப்பெட்டியைத் தாவிப் பிடித்து அகற்றினர். மண்ணெண்ணெய் கேனும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களது சொத்தையும், வீட்டையும் சிலர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், தன்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸாரிடம் மன்றாடினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, மேலப்பாளையம் பங்காளப்பா 3ஆம் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ள முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் “என்னிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருகிறது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதையடுத்து மூவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூவர் இன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

