
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை ஆட்டோ ஓட்டுநர் மடக்கி பிடித்த நிலையில், பொதுமக்கள் புரட்டியெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த போது, கஞ்சா போதையில் இருந்த இளைஞன் ஒருவன், கண்முன் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தான்.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த இருக்கை உள்ளிட்ட பொருட்களையும் கையில் வைத்திருந்த இரும்பு ராடினால் அடித்து சேதப்படுத்தினான்.

அதோடு, நிறுத்திக் கொள்ளாத அந்த போதை ஆசாமி, பேருந்து நிலையத்தில் வயிற்றுப் பிழைப்பு நடத்தி வரும் நடைபாதை பெண் வியாபாரிகளை தகாத வார்த்தையில் திட்டித் தீர்த்ததுடன், அவர்களின் பழக்கூடையை கிரிக்கெட் விளையாடுவது போன்று கூடையை அடித்து பழங்களை நாசம் செய்தான்.

கையில் இரும்பு ராடு வைத்திருந்ததால் அந்த கஞ்சா போதை இளைஞனை நெருங்க அங்கிருந்தவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். அப்போது, ஆட்டோ ஓட்டூநர் ஒருவர் சாமர்த்தியமாக அவனது பிடரியை பிடித்து தரையில் தள்ளினார்.
அடுத்த நொடியே, மக்கள் அந்த நபரை மாறு கை மாறு கால் வாங்கினர். பின்னர், அந்த இளைஞரை பொதுமக்கள் பிதுக்கி எடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கஞ்சா போதையில் ஹீரோயிஷம் காட்டி வந்த இதுபோன்ற நபர்களுக்கு, போலீசார் தங்களின் மாவுக்கட்டு ட்ரீட்மென்ட் கொடுத்து, பிற கஞ்சா குடுக்கிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.