சென்னை: இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் பிரச்னைகளுக்கு – நிரந்தர தீர்வுக்கு உரிய பயணமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, இலங்கை இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாகும். இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புடன் தொடர்பு கொள்வதையே விரும்புகிறது. ஏனெனில் ஒட்டு மொத்த மக்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் நலமுடன் வாழ இந்தியா தனக்கென்று ஒரு சிறந்த பண்பை கொண்டிருக்கின்றது. மேலும் தமிழ் மக்கள் உலகில் எந்த நாட்டில் குடியிருந்தாலும் அவர்கள் நலமுடன் வாழ இந்தியாவின் பங்கு மகத்தானது. எனவே தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக, பிரச்சனைகள் இன்றி வாழ்வதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு நல்ல முடிவை அவர்களுக்கு பெற்றுத் தரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அவசியமான ஒன்று. மாநில அரசு – தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பிரச்சனைகளின்றித் தொடர முக்கிய முடிவுகள் எடுத்து, அதனைச் செயல்படுத்தி நல்ல தீர்வு கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும். அதற்காக இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை காலம் கடத்தாமல் விரைந்து நடப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதற்காக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைச் செல்வதால் அந்நாட்டு அதிபரிடம், தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்தால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கும் சட்டத்தில் இடம் உண்டு என்று இலங்கைப் பிரதமர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் இலங்கை வாழ் தமிழர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுத்து, அதனடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதனைக் குறுகிய காலத்தில் நிறைவேற்ற இந்தியப் பிரதமர் – இலங்கைப் பிரதமர் மற்றும் அதிபரைச் சந்தித்து – 13 ஆவது அரசியல் சட்டதிருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு, இந்தியாவினுடைய உதவிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைதல், மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு உட்படுதல், இலங்கை ராணுவம் தமிழர் வாழும் பகுதியிலிருந்து கால தாமதமின்றி வெளியேறவும், கச்சத்தீவுப் பிரச்சனை, இலங்கை வாழ் தமிழர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்று இயல்பு வாழ்க்கை வாழவும், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள், சலுகைகள், பாதுகாப்பு போன்றவைகள் கிடைப்பதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவைகள் அனைத்தும் ஒரு காலக் கெடுவிற்குள் நிறைவேற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்கும் ஒரு தீர்க்கமான, நிரந்தர, சுமூக முடிவு கிடைக்கும் வகையில் இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் அமைய வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு விடிவுகாலமாக அமைய வேண்டும்: ஜி.கே.வாசன்
Popular Categories


