நாமக்கல்: தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து மணல் லாரிகள் புதன்கிழமை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும். தமிழக அரசால் நடத்தப்படும் அனைத்து மணல் குவாரிகளிலும் 2 யூனிட்டுக்கு ரூ.1,000, 3 யூனிட்டுக்கு ரூ.1,500 வீதம் வங்கி வரைவோலை பெற்றுக் கொண்டு மணல் வழங்கக் கோரி திருச்சி மண்டலத்தில் மணல் லாரிகளை இயக்காமல் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, கடந்த 3 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. மேலும், நிர்ணயித்த அளவை விட அதிகமாக மணல் ஏற்றிச்சென்ற லாரிகளைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்நிலையில், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, 2-ஆம் மணல் விற்பனை மைய ஒப்பந்ததாரர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன்பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது… 2-ஆம் விற்பனை மையங்களில் சிறிய லாரிகளுக்கு 2 யூனிட், பெரிய லாரிகளுக்கு 3 யூனிட் மணல் மட்டுமே ஏற்றிவிடப்படும். ஓட்டுநர்கள் கேட்கும் ஊருக்கு மணல் எடுத்துச் செல்ல உரிமம் வழங்கப்படும் எனவும், இரண்டாம் விற்பனை மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் செயல்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மணல் லாரிகள் புதன்கிழமை காலை முதல் வழக்கம்போல் இயங்கும் என்றார்.
மணல் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று முதல் இயங்கும்
Popular Categories


