
தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் ஆக்கப்படுவதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை இன்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழிப் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப் பட்டது.
இந்நிலையில், தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்களில் தமிழ் படித்த இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வு அமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தாளை அறிமுகம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;
- அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம்.
- தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
- தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
- கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப் படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.


