
மதமாற்ற விவகாரத்தில் கடும் அழுத்தம் காரணமாக பள்ளி விடுதியில் தங்கியிருந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் பாஜக., மாநில தலைவர் கே.அண்ணாமலை, பாஜக., தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக., தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் மாணவியின் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.
பின்னர், மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோரிடம், ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இது குறித்துக் கூறிய போது, மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக., போராடும். பாஜக., குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது. பாஜக., சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மாணவியின் குடும்பத்திற்க்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும்.
இந்தப் போராட்டம் எந்த மதத்திற்கு எதிரான போராட்டமும் இல்லை. மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம். இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உண்மை வெளிவர சிபிஐ., விசாரணை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக., கட்சி தன்னுடைய குரலை கொடுத்து வருகின்றது. மாணவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாஜக., போராடுகிறது.
ஆட்சியாளர்கள், பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பில்லாமல் பேசுவது நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தைச் சேர்ந்த இரண்டு மனிதர்கள் செய்த தவறு தான் இது.
இதில் புலனாய்வு துறையினர் தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளனர். தமிழக அரசும் மோசமாகக் கையாண்டுள்ளது. அற்புதமான காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று கூறினார்.





