சென்னை: தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் வரை சென்று இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து, அவர்களுக்காக இந்திய அரசின் சார்பில் கட்டப்பட்ட வீடுகளையெல்லாம் வழங்கி, இலங்கைத் தமிழர்களின் வரவேற்பை நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது குறித்தும்; தமிழர்களைச் சமமாக நடத்தி, அனைத்து உரிiமைகளுடனும் கூடிய கண்ணியமான வாழ்வுக்கு வழி வகுத்திட வேண்டுமென மோடி அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியது குறித்தும்; நமக்கு ஏற்பட்டிருக்கும் மன மகிழ்ச்சி நீழ்க்குமிழி போன்றதுதான் என நிரூபித்திடும் வண்ணம், கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியதாகவும், அந்தத் தாக்குதலில் நம்முடைய மீனவர்கள் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் வயதுள்ள செய்தி நமக்குப் பெரும் வருத்தத்தைத் தான் ஏற்படுத்துகிறது. இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் சென்று இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து பேசிய அதே நாளில், நம்முடைய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்து கப்பல்களில் முப்பதுக்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் அங்கே வந்திருக்கிறார்கள். இலங்கைக் கடற்படையினரைக் கண்டதும் அங்கிருந்து அவசரமாகப் புறப்படத் தயாரான போது, தமிழக மீனவர்களின் படகிலே இலங்கைக் கடற்படையினர் இறங்கி, படகின் உரிமையாளர் மற்றும் ஆறு மீனவர்களை கயிற்றால் தாக்கியதோடு, மீனவர்களின் வலைகளை அறுத்து, மீன்பிடி சாதனங்களையெல்லாம் கடலில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியப் பிரதமரும், இலங்கை அதிபரும் சுமூகமாகப் பேசி, பிரச்சினையிலே முடிவு காணும் முயற்சியில் ஈடுபட்டாலும், அதிகாரிகளின் இப்படிப்பட்ட வன்முறைகள் இருநாட்டிற்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தவே செய்யும். மேலும் ஒருபுறம் கைலாகு கொடுத்துக் கொண்டே, மறுபுறம் முதுகில் குத்துவதைப் போலவும் இருக்கிறது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விடும். எனவே இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரையை வழங்கிட இந்திய அரசு இலங்கை அதிபருக்கு வலியுறுத்துவதே இந்தக் குழப்பத்திற்குத் தீர்வு காண உதவிடும் என்று நம்புகிறேன்.
- என்று கூறியுள்ளார்.


