ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிவதாக தேவஸ்தான நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் வருவது வழக்கம் .
தொற்று பரவலுக்கு பிறகு பெரும் கட்டுப்பாடுகளுடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் இலவச சாமி தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்தன.
தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பிலிருந்து இலவச தரிசன டிக்கெட் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் ஆகியவை நேரடியாக கவுன்டர்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில் தற்போது திருப்பதியில் உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பக்தர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும் எனவும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே வஸ்திரம் அலங்கார சேவைக்கான கட்டணம் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ஆயிரத்தில் இருந்து 2,500 ஆகவும், சுப்ரபாத தரிசன கட்டணம் ரூபாய் 240லிருந்து 2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.