வங்கக் கடலில் நிலவும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்குவதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகத்தில் வட மாவட்டங்களிலும் கேரளத்தில் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தநேரத்தில் பலத்த தரைக்காற்று வீசும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விடும். இந்த காற்றழுத்த மண்டலம், தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று கன மழை பெய்யும்.
மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில், மிக கன மழையும், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.
நாளை மறுநாள், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில், மிக கன மழையும்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.தரைக்காற்றுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும். தமிழக கடற்பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும். இதனால், வரும் 7ம் தேதி வரை, மீனவர்கள் வங்கக் கடலின் தெற்கு, கிழக்கு, தென் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து வடமேற்கு நோக்கி நகர்வதாகவும், இதன் காரணமாக இன்று முதல் திங்கள் கிழமை வரை 3 நாட்களுக்கு கேரளாவின் பல பகுதிகளிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையின் காரணமாக கடலில் சூறைக்காற்று வீசும் என்றும் மீனவர்கள் வருகிற 7-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.




