மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி உற்சவத்தில் நடைபெறும் முக்கிய விழாவாக வெள்ளி க்கிழமை இரவு வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இக்கோவில் மாசித் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் சிறப்பு தீபாரதனை, சாமி வீதி உலா, சமய மாநாடு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக வெள்ளி க்கிழமை
மாலை 6 மணிக்கு யானை மீது களப பவனி வருதலும், 6-30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர்.
பின்னர் இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை தொடங்கியது. ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடைபெறும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இப்பூஜை மாசித் திருவிழாவின் 6-ம் நாள் விழாவன்றும், மீனவரணி கொடைவிழாவன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் இப்பூஜை நடத்தப்படும்.
வலிய படுக்க பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, மாவு, தேங்காய், பழவகைகள், இளநீர் பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவுப் பதார்த்தங்கள் படைக்கப்பட்டது.
அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.வலிய படுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் அதிகமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.







