குன்னூரில் கடந்த டிசம்பர் 9-ந் தேதி
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இந்திய கடற்படை தளபதி ஆய்வு செய்தார்.
இந்திய முப்படை தலைமை தளபடி பிபின்ராவத் அவருடைய மனைவி உள்பட 14 பேர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் கடந்த டிசம்பர் 9-ந் தேதி சென்றனர். அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. இதில் 14 பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்பதற்காக புதன்கிழமை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் வெலிங்டன் வந்தார். பின்னர் அவர் அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அவர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு விபத்து நடந்து எப்படி என்பது குறித்தும் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் விபத்து நடந்த இடத்தில் மவுன அஞ்சலி செலுத்திய அவர், விபத்தை நேரில் பார்த்த நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களிடமும் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் அங்கிருந்து வெலிங்டன் புறப்பட்டு சென்றார்.





