ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அறிந்து மூதாட்டி ஒருவர் சிவப்பு சேலையை தண்டவாளத்தில் கட்டி ரயிலை நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அவாகர் கிராமத்தை சேர்ந்த ஓம்வதி (65) என்ற மூதாட்டி அருகில் உள்ள வயலுக்கு வேலைக்காக சென்றார்.
அப்போது ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது, அதில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி ஓம்வதி, இதில் ரயில் வந்தால் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், தான் அணிந்திருந்த சிவப்பு சேலையை, மர குச்சிகளில் கட்டி தண்டவாளத்தின் குறுக்கே கட்டி வைத்துவிட்டார்.
அப்போது இடாவில் இருந்து துண்ட்லாவை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் அங்கு வந்தது. அப்போது தண்டவாளத்தில் குறுக்கே சிவப்பு துணி இருப்பதைக் கண்டு ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார்ர்.
பின்னர் விரிசல் குறித்து தெரியவந்த பின்னர், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரிசெய்யப்பட்டு ரயில் கிளம்பிச் சென்றது.
இதுதொடர்பாக புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து பலரும் மூதாட்டியை பாராட்டி வருகின்றனர்.