தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பைபர் படகில் கடத்தப்பட்ட ரூ16கோடி மதிப்பிலான போதை பொருட்களை தூத்துக்குடி தேசிய வருவாய் புலனாய்வுத்துறை இன்று பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப் படுவதாக தேசிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரி கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் நின்றிருந்த ஒரு பைபர் படகில் சோதனையிட்டனர்.
அப்போது அதில் போதை பொருளான ஐஸ் எனப்படும் கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் 5 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 16 கோடி ஆகும்.
இதையடுத்து படகை ஓட்டிவந்தவர் மற்றும் 2 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகினை தேசிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது போதை பொருளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து வளைகுடா நாட்டிற்கு கடந்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போதை பொருளை கடத்தி செல்ல திட்டமிட்ட கும்பல் யார்? இவர்கள் எங்கிருந்து இதனை கடத்தி வந்தனர்? என தொடர்ந்து தேசிய வருவாய் புலனாய்வுதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய படகோட்டி மற்றும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





