மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் 20 ஆயிரம் பேருக்கு லட்டு தயாரிக்கும் வகையில் புதிய எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ் திருப்பதி கோவிலை போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தினமும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக லட்டு தயாரிக்கும் எந்திரம் குஜராத் மாநிலத்தில் இருந்து இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, தெற்கு ஆடிவீதி, யானை மகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டது. அந்த எந்திரத்தின் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சம் ஆகும். அதன் மூலம் தினமும் ஒரு மணி நேரத்தில் சுமார் 30 கிராம் எடை கொண்ட 2,400 முதல் 3 ஆயிரம் லட்டுகளை 15 பேர் கொண்ட குழுவினர் தயாரித்து வருகிறார்கள். மேலும் பக்தர்களின் வருகையை கணக்கில் கொண்டு தினமும் குறைந்தது 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மனை தரிசித்து வரும் பக்தர்களுக்கு அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்துள்ளது. எனவே அனைவரும் இலவச லட்டு பிரசாதம் வழங்கவும், அதன் உற்பத்தியை அதிகரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து கூடுதலாக ஒரு லட்டு தயாரிப்பு எந்திரத்தை குஜராத் மாநிலத்தில் இருந்து ரூ.4½ லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டது.அந்த எந்திரமும் தற்போது நிறுவப்பட்டு அதன் மூலம் இன்று முதல் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது. சித்திரை திருவிழாவால் கோவிலுக்கு வரும் சுமார் 40 ஆயிரம் பக்தர்களுக்கான லட்டுகளை தற்போது கோவில் நிர்வாகம் தயாரித்து வழங்கி வருகிறது. கோவிலுக்கு வரும் அனைவருக்கும் லட்டு பிரசாதம் கிடைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





