உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திரு தேரோட்டம் இன்று மதுரை ரதவீதிகளில் கோலாகோலமாக துவங்கி நடந்தது.தேரில் பவனி வந்த சுந்தரேஸ்வரர் மீனாட்சி யை பக்தர்கள் காலையிலேயே தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்த ஆண்டு சித்திரை பெருந்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா அலை முடிந்ததால் இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வழக்கம்போல் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் காலை 6 மணி அளவில் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.2 ஆண்டுகளுக்கு பின் சித்திரை தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
ரதவீதிகளில் எங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வே இருந்தது.கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று பெரும் உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ மாசி வீதியில் துவங்கி தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கீழ மாசி வீதிக்கு தேர் மதியம் வந்து சேரும் அழகை காண கண்கோடி வேண்டும்
மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் கோவிலுக்கு செய்து கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்களில் தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தேரோட்டவிழாவில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க ட்ரோன் கேமரா, சிசிடிவி கேமரா, கண்காணிப்பு டவர், குற்றவாளிகளை அடையாளம் காணும் செயலிகள், தனிப்படை போலீசார் என மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
விழாவின் 12-ம் நாளான நாளை சனிக்கிழமை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.








