மயிலாடுதுறையில் இன்று கவர்னர் ரவிக்கு பாதுகாப்பாக சென்ற கான்வாய் மீது கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி மற்றும் கம்புகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க இன்று மயிலாடுதுறைக்கு வந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த கவர்னர் ஆர்என் ரவி திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை கஜ பூஜை செய்து சாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மணப்பந்தல் வழியாக தர்மபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மணமந்தல் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை கடந்து கவர்னர் சென்று விட்ட நிலையில், பாதுகாப்பாகச் சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகள் கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தன. நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் ஜனாதிபதிக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தடுப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக கவர்னருக்கு பா.ஜ.க வினர் வரவேற்பளித்தனர். தருமபுரம் ஆதீனம் வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதனை எடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கவர்னர் திறந்து வைத்தார்.
கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் கவர்னர் பங்கேற்று பேசினார்கள். தொடர்ந்து தர்மபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை கவர்னர் துவக்கி வைத்தார். கவர்னர் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் மிக அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.









