நீலகிரி அருகே பூனைக்குட்டி நினைத்து சிறுத்தைக் குட்டியை தூக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த தொழிலாளிகள் செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தைக் குட்டி ஒன்று கிடந்துள்ளது.
இதை பார்த்த அவர்கள் பூனைக்குட்டி என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அது பூனைக்குட்டி இல்லை சிறுத்தைக் குட்டி என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தைக் குட்டியை மீட்டு, அது கிடந்த அதே இடத்தில் விட்டுள்ளனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், ‘தாய் சிறுத்தை இரை தேடுவதற்காக சென்று இருக்கலாம். அதற்காக குட்டியை பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் அந்த குட்டி எங்கு எடுக்கப்பட்டதோ அதே பகுதியில் மீண்டும் விடப்பட்டுள்ளது. நான்கு வனத்துறை அதிகாரிகள் அதனை கண்காணித்து வருகின்றனர்.
நிச்சயம் தாய் சிறுத்தை குட்டியை எடுத்துச்செல்லும் என நம்புகிறோம். அதுவரை வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்’ என தெரிவித்துள்ளனர்.