தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு மே 5ந்தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை பள்ளிகளில் பயிலும் 8.37 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் இத்தேர்வினை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந்தேதி 3,936 மையங்களில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வு 10ந்தேதி தொடங்குகிறது. 5ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 31ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை பள்ளிகள் வழியாக மட்டும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு தயாராக உள்ளனர்.
பொதுத்தேர்வினை எந்த ஒரு சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.நாளை மறுநாள் தேர்வு தொடங்க இருப்பதால் வினாத்தாள்கள் அனைத்தும் சென்னையில் இருந்து தனித்தனி வாகனங்களில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வாகனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைந்தன. அன்றே அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.இதுவரையில் இல்லாத அளவிற்கு வினாத்தாள் பாதுகாப்பு அறைக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை தயாரித்து வழங்கும் வினாத்தாள்கள் பாடம் வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வினாத்தாள் அறை ‘சீல்’ வைத்து மூடப்பட்டு உள்ளது.
ஸ்ட்ராங் ரூம் என்று சொல்லக்கூடிய அந்த அறையில் வினாத்தாள் கட்டுகள் வைத்து பாதுகாக்கப்படும்.
சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு
அந்த அறையை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கிறார்கள்.





