மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பட்டின பிரவேசத்திற்கான பெருவிழா வேத பாராயண முறைப்படி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஜபம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்திற்கு எழுந்தருளினார்.
அதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த திருவிழாவில், முக்கிய விழாவாக மே 18-ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும், ஞானசம்பந்தர் குருபூஜையும் நடைபெறும்.இதையடுத்து, மே 20-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21-ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மே 22-ஆம் தேதி இரவு நடைபெறும் 11ஆம் நாள் விழாவில், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது, தருமபுரம் ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளுகிறார். இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி, சமீபத்தில் சர்ச்சையான நிலையில், பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





