கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன்-நீலம் தம்பதியினர். இவர்களது மகன் திரிசூல வேந்தன் (7). இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த வயது குழந்தைகள் ஆங்கில நாட்காட்டிகளைத் தெரிந்து கொள்வதிலேயே சிரமப்படும் சூழலில் சிறுவன் திரிசூல வேந்தன் பஞ்சாங்கத்தை முழுமையாக படித்து, அதில் வரும் யுகங்கள், மாதங்கள், நாள், திதி, நல்ல நேரம் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து வைத்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை பவுர்ணமி நாட்கள் எப்போது வரும், தீபாவளி பண்டிகை உட்பட அனைத்து பண்டிகைகளும் பஞ்சாங்க நாட்காட்டியின்படி எப்போது வரும் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரிசூல வேந்தனின் விரல் நுனியில் உள்ளன.
இது தவிர, ஒருவரது பிறந்த நாளை வைத்து அவர் எந்த நட்சத்திரம், ராசியில் பிறந்தவர் என்பதை கணினி மற்றும் இணையதளத்தின் உதவி இல்லாமல் சில நிமிடங்களில் கணித்து கூறுகிறார் திரிசூல வேந்தன்.
இதுகுறித்து சிறுவனின் தாய் நீலம் கூறியதாவது:-
எங்கள் வீட்டில் மாட்டியிருந்த காலண்டரை திரிசூல வேந்தன் அடிக்கடி எடுத்து பார்ப்பார்.
மேலும் அனைத்து கிழமைகள் மற்றும் மாதங்களை கற்றுக் கொண்டார்.
இதனையடுத்து தினசரி நாட்காட்டிகளில் உள்ள பஞ்சாங்க குறிப்புகள் குறித்து ஆர்வத்துடன் எங்களிடம் கேட்பார்.
இதனால், பஞ்சாங்கத்தில் அவருக்கு ஆர்வம் இருப்பதை அறிந்தோம். தொடர்ந்து எங்கள் குடியிருப்பின் அருகில் உள்ள கோவில் பூசாரி சந்திரமவுளி என்பவரிடம் வாரந்தோறும் இரண்டு நாட்கள் சென்று பஞ்சாங்க குறிப்புகளை கற்றுக் கொண்டார்.
கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாத இடைவெளியை பயன்படுத்தி இதனை கற்றுக் கொண்டார். ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திதி, நேரங்களை எங்களிடம் கூறி வியப்பில் ஆழ்த்துவார்.
இதைத் தொடர்ந்து, திரிசூல வேந்தன் குறித்த விவரங்களை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அமைப்புக்கு அனுப்பினோம். தொடர்ந்து அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
அடுத்த ஆண்டு வெளியாகும் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் திரிசூல வேந்தன் குறித்த குறிப்புகள் இடம்பெறும்.
இவ்வாறு நீலம் கூறினார்.
தொடர்ந்து, “இதையெல்லாம் கற்றுக் கொள்ள சிரமமாக இல்லையா?” என்று சிறுவனிடம் கேள்வியெழுப்பினோம். “இதெல்லாம் ரொம்ப ஈசி..” என்று மழலைக் குரலில் கூறினார் திரிசூல வேந்தன்.