ஏழைகளின் காஷ்மீர் ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் ஏழைகளின் காஷ்மீர் என்றே பலரும் அழைக்கின்றனர். காஷ்மீர் சிம்லா போல் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் , வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர்.
தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ந்தேதி இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மலர் மாடங்களை பார்வையிட்டார்.துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, திமுக எம்.பி., ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மலர் கண்காட்சியில் 1000 ரோஜாக்களை கொண்டு மஞ்சப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்காவில், இன்கா மேரிகோல்டு, பெட்டூனியா உள்ளிட்ட பல்வேறு வகைகளை கொண்ட, 5.5 லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 40 ஆயிரம் தொட்டிகள், மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் கட்டடத்தின் மாதிரி முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து கார்னேஷன் மலர்கள் கொண்டு வரப்பட்டது.ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலை முதலே மிக அதிகளவில் காணப்பட்டது.







