சென்னை: ஓசூர் அருகே ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் எவரும் செல்லவில்லை. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான ஆனைக்கல் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற இன்டர்சிட்டி ரயில் இன்று காலை 7.33 மணிக்கு விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் பலியாகினர். 87 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து நிகழ்ந்த உடன் கர்நாடாகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார். சதானந்த கவுடாவும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளாமானோர் பயணித்தனர். அதுவும் விபத்துக்குள்ளான பெட்டிகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 176 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்த இடத்துக்கு பிற்பகல் வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சர் கூட சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறவும் இல்லை.. மீட்புப் பணிகளை பார்வையிடவும் இல்லை.

