சென்னை பல்லாவரம் அருகே
மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று நாட்டு மருந்து கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41).
இவர் அதே பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (39). இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் அரிகிருஷ்ணன் (9).
இவர்களில் நித்யஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், அரிகிருஷ்ணன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றார். இன்று காலையில் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கம் வசித்தவர்கள் பிரகாசின் வீட்டுக்கு சென்றனர். வீட்டு கதவை தட்டியபோது யாரும் திறக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் நித்யஸ்ரீ, அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டு கதவு உள்ளே தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மரம் அறுக்கும் ரம்பத்தால் அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் பிரகாஷ் மனைவி, மகன், மகளை கொன்று தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
முதலில் பிரகாஷ் மனைவி மற்றும் குழந்தைகள் ஒவ்வொருவரின் தலையையும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துள்ளார். இதில் அவர்கள் 3 பேரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். அதன் பிறகு பிரகாஷ் அதே ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்துள்ளார்.
மனைவி மற்றும் குழந்தைகளை பிரகாஷ் ரம்பத்தால் அறுத்து கொன்று தானும் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
பிரகாஷ் நாட்டு மருந்து கடை நடத்தி குடும்பத்தை கவனித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சரியான வியாபாரம் இல்லை. இதனால் அவர் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக வியாபாரம் இல்லாததால் அவர் மேலும் நெருக்கடிக்கு உள்ளானார். இதனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லை அதிகரித்ததால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவுசெய்து நேற்று இரவு மகன், மகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது பிரகாஷ் மரம் அறுக்கும் ரம்பத்தால் குழந்தைகளின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்து பின்னர் மனைவியையும் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று நாட்டு மருந்து கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொழிச்சலூரில் கொலை நடந்த வீட்டில் ஆய்வு செய்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேட்டியளித்த போது கொலைக்கு பயன்படுத்திய ரம்பத்தை கடந்த 19-ம் தேதி பிரகாஷ் ஆன்லைனில் வாங்கியதாக ஆணையர் தெரிவித்தார். கடன் தொல்லையா? கடன் கொடுத்தவர்கள் தொல்லை தந்தார்களா? என்பது விசாரணைக்கு பின்பே தெரியும் என கூறினார்.
