இன்று சிம்லாவில் நடந்த விழாவில்
பேசிய பிரதமர் மோடி நான் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு முறை கூட என்னை பிரதமராக பார்த்தது இல்லை என பேசியுள்ளது பல்வேறு தரப்பினரிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் மே 30 உடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை முன்னிட்டு நேற்று முதல் வருகிற ஜூன் 14ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இமாசல பிரதேசத்திற்கு இன்று சென்றுள்ளார். சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்திற்கு பொதுமக்களுக்கு உரையாற்ற சென்ற அவரை வரவேற்க பெருந்திரளான கூட்டம் கூடியிருந்தது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கியதும், கூடியிருந்த மக்கள் கூட்டம் கோஷங்களை எழுப்பியபடி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில்… ஒரு முறை கூட என்னை நான் பிரதமராக பார்த்தது இல்லை. ஆவணங்களில் கையெழுத்திடும்போது மட்டுமே, அதற்குரிய பொறுப்பு உள்ளதற்காக நான் பிரதமராக இருக்கிறேன். கோப்புகள் கையெழுத்திடப்பட்டு சென்ற பின், நான் பிரதமர் இல்லை.
130 கோடி மக்களின் முதன்மை சேவை செய்பவராக மட்டுமே நான் இருக்கிறேன். என்னுடைய வாழ்வின் எல்லாமும் ஆக இருப்பவர்கள் நீங்களே. என்னுடைய வாழ்வும் கூட உங்களுக்கானதே என்றுபேசியுள்ளார்.




