கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகம் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு, இன்று முதல் கடலைமிட்டாய்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
ஒரு பெட்டியில் தலா 200கிராம் கொண்ட 5 பாக்கெட்டுகள் என ஒரு கிலோ கடலைமிட்டாய் இருக்கும்.இதற்கு 390 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் கூறியிருப்பதாவது,

புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.
தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி அஞ்சலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் தபால்காரர் மூலம் சேர்க்கப்பட உள்ளது.
இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் ரூ 390 கொடுத்து கடலை மிட்டாய் ஆர்டர் செய்தால், கோவில்பட்டி தலைமை அஞ்சலக இணையம் மூலம் பெறப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கு விரைவு அஞ்சல் மூலம் கொண்டு சேர்க்கப்படும். விரைவு அஞ்சலுக்கு தனி கட்டணம் கிடையாது. ஒரு கிலோ எடையுள்ள கடலை மிட்டாய் பார்சலில் 5 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் இருக்கும். வீட்டிலிருந்தபடியே தபால் காரர்கள் மூலம் ரூ 390 கட்டி ஆர்டர் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.