ராஜஸ்தான் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வா கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு வாக்களித்ததையடுத்து, அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கடாரியா பிறப்பித்துள்ள உத்தரவில், “கொறடா உத்தரவையும் மீறி குஷ்வா திவாரிக்கு வாக்களித்துள்ளார். எனவே, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என குஷ்வாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடாரியா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை இடங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரமோத் திவாரி, ரண்தீப் சுர்ஜேவாலா மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக சார்பில் போட்டியிட்ட கன்ஷியாம் திவாரி 43 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் பாஜக – 3, காங். – 1 ஆகிய இடங்களை கைப்பற்றின.
பாஜக சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெகர் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.காங்கிரஸ் சார்பில் ஜெயராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ளார்.






