கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை முதல் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டுமென சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பெற்றோர்களுக்கு குறுந் தகவல்கள் சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளன.
அதேசமயம் நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்துமா என்பது குறித்து அரசுத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அப்படியே உள்ளன. எனவே, பள்ளி செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவ-மாணவிகள், கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.
கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் திறக்கும் சூழ்நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா நோய்த்தொற்றும் உயர்ந்து வருவதால் தூய்மைப் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்துவிட்டனர். விடுமுறை நிறைவடைவதால் பலரும் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சுமார் 250 பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 250 பஸ்களை இயக்கப்படுகின்றன . மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் இருக்குமாறும் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





