சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரை ஒரு கானல் நீரே என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:ள் தமிழக ஆளுநரின் உரை, புதிய திட்டங்களோ மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு எந்த ஒரு தீர்வோ முன் வைக்கப்படாத சம்பிரதாயத்திற்கான உரையாகவே உள்ளது. மக்கள் அன்றாடம் சந்திக்கின்ற சுகாதார சீர்கேடு, குடிநீர் வசதியின்மை, மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, குண்டும் குழியுமான சாலைகள் என எந்த பிரச்சினைக்கும் தீர்வுக்கான வழிவகை காணப்படவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கிடக்கிறது. இந்தியாவிலே சாலை விபத்துக்கள், வன்கொலைகள், வழிப்பறி கொள்ளைகளில் தமிழகம் முதல் இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது என்று தேசிய குற்றப்பதிவு துறை அறிக்கைகள் கூறுகின்றன. சட்டம் ஒழுங்கை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து எந்த தகவலும் இல்லை. மின்வெட்டு என்பது தமிழகத்தில் தீராத பிரச்சனை ஆகி மக்கள் அன்றாடம் அவதிப்படுகிறார்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் புதிய மின் திட்டங்களை அறிவித்து கொண்டிருக்கிறார்களே தவிர, ஏற்கனவே அறிவித்த மின் உற்பத்தி திட்டங்கள் எந்த நிலையில் இருக்கிறது, எவ்வளவு மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்ற தகவல் ஏதும் ஆளுநர் உரையில் இல்லை. இதனிடையே தமிழகத்தில் தொழில்துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்த போவதாக அறிவிக்கபட்டுள்ளது ஆனால் கடந்த வாரத்தில் முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர் பார்த்த அளவு முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன. தொழிலதிபர்களை அழைத்து பேசுவதால் மட்டுமே முதலீட்டாளர்களை கவர்ந்திட முடியாது, மாறாக அவர்களுக்கு எவை எவை தடங்கல்களாக உள்ளனவோ அவற்றை களைந்து புதிய தொழில் துவங்குவதற்கு ஏதுவான சூழலை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கான எந்த முனைப்பும் தென்படவில்லை. தமிழகத்தில் பரவலாக மக்கள் குடிநீருக்காக போராடி வருகிற சூழலில், குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காமல் கூட்டுக்குடிநீர் திட்டம் என்று அறிவித்ததையே புதிய அறிவிப்பாக மீண்டும் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். தாது மணல் மற்றும் கிரானைட் கொள்ளையை தடுப்பது பற்றியோ, கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்குவது பற்றியோ எந்த அறிவிப்பும் இல்லை. சென்னை மக்கள் போக்குவரத்திற்கு பெரிதும் எதிர்பார்க்கும் மெட்ரோ ரயில் திட்டதின் ஒரு பகுதி முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்படாததற்கு ஜெயலலிதா முதல் அமைச்சராக இல்லாததே காரணம் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஆளுநர் உரை கானல் நீரே.
ஆளுநர் உரை ஒரு கானல் நீர்: விஜயகாந்த் விமர்சனம்
Popular Categories


