உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் ராமு காலமானார். இவர் இயக்குநர் சசி இயக்கிய “பூ” திரைப்படத்தின் மூலன் திரையுலகில் அறிமுகமானார். கதாநாயகன் தங்கராசுவின் தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெள்ளந்தியான கிராமத்து தந்தையாக முதல் படத்திலேயே மிளிர்ந்திருப்பார்.தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு.நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.

நீர்ப்பறவை, வீரம், ஜில்லா, நெடுநல்வாடை ஆகிய படங்களிலும் நடித்தார். தங்க மீன்கள் படத்தில் செல்லாமாளின் தாத்தாவாக பாசமாகவும் கல்யாண சுந்தரத்தின் தந்தையாக கடுமையாகவும் அட்டகாசமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராமு. பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வர் அறையில் பரியனுக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரமாக வருவார் ராமு.

என்னோட அப்பா செருப்பு தைக்கிறவர். அவரோட புள்ளை நான். உனக்கு பிரின்சிபால். பன்னி மாதிரி என்ன அடிச்சு விரட்டுனானுக. ஓடி ஒளிஞ்சு போயிட்டேனா? எது அவசியம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்ன அடக்கனும் நினைச்சவன்லாம் இன்னைக்கு என்னை அய்யா சாமின்னு கும்புடுறான். உன்னை சுற்றி நடக்குற விஷயத்தலாம் மீறி நீயும் ஜெயிச்சு வருவன்னு நான் நம்புறேன்.” என்று பரியனை அனுப்பி வைக்கும் கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார் ராமு.இதையடுத்து சூரரை போற்று படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருப்பார். அதில் அவர் இறக்கும் காட்சியும் இருக்கும்.
மாரடைப்பு ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ராமு. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட நடிகர் தோழர் பூ ராமு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும் நினைவுகூர்வார்கள்.

பூ திரைப்படத்தின் வழியாகத் தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர், நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும். தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர் பூ ராமு அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் திரையுலக பிரமுகர்கள் பலர் பூ ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.




