ஆந்திரா மாநிலத்தில் இன்று காலை ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தடிமரி பகுதியில் உள்ள சிலகொண்டையா பல்லி கிராமத்தை சேர்ந்த சிலர் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்றுகொண்டிருந்தனர்.
ஆட்டோவில் மொத்தம் 8 பேர் பயணித்தனர். ஆட்டோ கிராமத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தபோது மேலே சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி ஆட்டோ மீது விழுந்தது. இதனால், ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடனடியாக தீப்பற்றியது. இதனால், ஆட்டோவில் இருந்த அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியது.
ஆட்டோவில் இருந்து இறக்க முயற்சித்தபோதும் தீ வேகமாக பரவியதால் பயணிகள் ஆட்டோவிற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து ஆந்திரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.