இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு சென்ற நிலையில் அங்கிருந்து அவரை வெளியேற்ற போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோத்தபயவுடன் 13 பேர் ஏஎன்32 விமானத்தில் மாலத்தீவு சென்றதாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்வதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம் வெடித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் இப்ராகிமின் மாளிகை அருகே மாலத்தீவு மக்கள், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
