

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது. பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் வாக்குகளை செலுத்தினர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி யுள்ளது . அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவினை பிரதமர் மோடி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்ட முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இன்று காலை சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இன்று மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.