
கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என இன்று கேரளா கொச்சி வந்துள்ள பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசும்போது, நாட்டிலுள்ள ஒவ்வோர் ஏழைக்கும் வீடு வழங்குவதற்கான பிரசாரத்தில் நம்முடைய அரசு ஈடுபட்டு வருகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, கேரள ஏழைகளுக்கு 2 லட்சம் வீடுகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் 1.3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. அமுதத்திற்கான சுதந்திரம் என்ற அடிப்படையில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தீர்மானத்தின்படி பணி நடந்து வருகிறது.
இதில், கேரள மக்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். தீர்மானங்களை பா.ஜ.க. செய்து முடிக்கிறது என கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசும்போது, கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லூரியையாவது தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அது கேரள இளைஞர்களுக்கு பெரிதும் உதவும். கேரளாவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பா.ஜ.க. அரசு பல்வேறு திட்ட பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார். ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்திகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை காப்பாற்ற சில குழுக்கள் முன்வந்து ஒரு பிரிவாக செயல்படுகின்றன.
நாடு முழுவதும், எங்கெல்லாம் பா.ஜ.க. அரசாளுகிறதோ, அங்கெல்லாம் வளர்ச்சி திட்ட பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. ஏனெனில் மத்தியில் மற்றும் மாநிலத்தில் என இரட்டை என்ஜினுடன் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இரட்டை என்ஜின் கொண்ட அரசானது, கேரளாவை வளர்ச்சிக்கான புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உதவும் என அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் இருந்து கொச்சி வருகை தந்தார். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையத்தின் அருகிலுள்ள அரங்கத்தில் நடைபெறும் பாஜவின் பொது மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசியபின் மாலை 6 மணியளவில் கொச்சி விமான நிலைய அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்தார்ர்.கொச்சி மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது கட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதேபோல கோட்டயத்தில் இரட்டை ரயில் பாதை மற்றும் கொல்லம்-புனலூர் மின் ரயில் பாதை, எர்ணாகுளம் ரயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைத்தார். நாளை காலை 9.30 மணியளவில் இந்தியாவிலேயே முதன்முறையாக கொச்சி கப்பல் கட்டும் சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதன் பின்னர் மதியம் அவர் மங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

