

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை காஞ்சிபுரம் பகுதியில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகைதந்தனர்.
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும். சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் விசேஷமானது. இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும். இதையொட்டி சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் துளசி மாலை கொடுத்து வழிபாடு செய்தனர். சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான கோவிலில் குவியத்தொடங்கினார்கள்.
அவர்கள் வரிசையில் நின்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அலங்காரங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றன. இங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டது. சிறப்பு 4 கால பூஜை நடக்கிறது. மேலும் கல் பதித்த ரத்னாங்கி சேவையும் நடைபெறுகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், துளசி மாலை, தாமரை மாலை, சம்பங்கி மாலை ஆகியவற்றால் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா என்று பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பியபடியே சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோத்தகாரி பெருமாள் உள்ளிட்ட திவ்ய தேசங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.