அதிமுக-பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை..

Published:

1762269 court 3 - 2026

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளராக தற்போது எடப்பாடி பழனிசாமி உள்ளபோது தேர்தலுக்கு என்ன அவசரம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் இபிஎஸ் தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

விசாரணையில், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே முறைகேடானது என்றும் அதிமுகவின் அனைத்துப் பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. முன்னதாக, அடுத்த 3 மாதங்களுக்குள் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.தனி நீதிபதியின் இந்த தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இந்த வழக்கில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குதான் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் ஏற்கெனவே கேவியட் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img