சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்த போது எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ.30 லட்சத்தி 32 ஆயிரம் மதிப்புள்ள 690 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த முகமது பசலின் பஹில்(30) என்பவரை சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 65 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 486 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதுப்போல் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் வந்த வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ. 30 லட்சத்தி 10 ஆயிரம் மதிப்புள்ள 685 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உடமைகளை சோதனை செய்த போது 3 காப்பு, ஒரு மோத்திரம் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ 11 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 36 லட்சத்தி 92 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 116 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





