சட்டசபையை புறக்கணிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு?

Published:

images 50 - 2026

சட்டசபையில் தனக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அருகருகே இருக்கை உள்ளதால் எப்படி அருகே அமர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டார். 63 எம்.எல்.ஏ.க்கள் நம்மிடம் இருக்கும் போது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்.இதனால் சட்டசபையை புறக்கணிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கோகுல இந்திரா உள்பட பலரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் 51-வது தொடக்க விழாவை 3 நாட்கள் கொண்டாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது மட்டுமின்றி அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டன. இதில் அனைவருமே அ.தி.மு.க. தொடக்க விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அ.தி.மு.க. கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது குறித்து மக்களிடம் எடுத்த கூற இந்த பொதுக்கூட்டம் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

சட்டசபை கூட்டம் வருகிற 17-ந்தேதி கூடுவதால் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்பதால் அதுபற்றியும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த விசாரணை அறிக்கையில் அ.தி.மு.க.வுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் சொல்லப்பட்டிருந்தால் அதை சட்டசபையில் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதித்தனர். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய நிலையில், அவர் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க கோரி சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருந்தது பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர். கடிதம் கொடுத்து 2 மாதம் ஆகியும் சபாநாயகர் இதில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் மூத்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்டார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

சட்டசபையில் தனக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அருகருகே இருக்கை உள்ளதால் எப்படி அருகே அமர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டார். கட்சி நம் வசம் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் நம் பக்கம் உள்ளனர். 63 எம்.எல்.ஏ.க்கள் நம்மிடம் இருக்கும் போது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார். எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க மீண்டும் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கலாமா? என்றும் ஆலோசனை கேட்டார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டதாக தெரிகிறது. சட்டசபை கூடும் போது சபாநாயகர் என்ன மாதிரி முடிவெடுத்து அறிவிப்பார் என்பதை பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆலோசித்தனர் சபாநாயகரின் முடிவை பொறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் கருத்து பரிமாறப்பட்டது. எனவே சட்டசபை கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் எந்த மாதிரி நடந்து கொள்வார்கள் அவரை எந்த மாதிரி விமர்சனம் செய்வார்கள் என்பது அ.தி.மு.க.வினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img